கோபத்தில் தெருநாயின் காலை ஒடித்த வாலிபர் தலைமறைவு: கோவை போலீஸ் வலைவீச்சு
கோவை: தன்னைப் பார்த்து குரைத்த தெருநாயை பயங்கரமாகத் தாக்கியதாக வாலிபர் ஒருவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகரில் உள்ள கணபதி இராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் தினேஷ் (29). இவர் அங்குள்ள பேக்கரி அருகே நின்றிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பிஜு(24) என்பவர், தன்னை பார்த்து குரைத்த தெருநாயை பிடித்து இழுத்து வருவதைக் கண்டுள்ளார்.
பின்னர், அத்தெருநாயை பிஜூ தடியாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த நாயின் கால் எலும்பு முறிந்தது. இதனால், வேதனை தாங்காத அந்த நாய் ஊளையிட்டபடி அலறி துடித்துள்ளது.
அங்கிருந்தவர்கள் இது தொடர்பாக பிஜூவிடம் தட்டிக் கேட்டுள்ளனர். ஆனபோதும், தொடர்ந்து அந்நாயைத் தாக்கியுள்ளார் பிஜூ. உடனடியாக இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதனிடம் போன் மூலம் புகார் அளித்துள்ளார் தினேஷ். மேலும் நாய் படுகாயத்துடன் இருப்பது போன்ற படத்தையும் மின்னஞ்சல் மூலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்தார்.
இதைப்பார்த்த போலீஸ் கமிஷனர் விசுவநாதன், தெருநாயை அடித்து துன்புறுத்திய வாலிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சரவணம்பட்டி போலீசாருக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் கால் ஒடிந்த நிலையில், படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நாயை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக நாயை காளப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே தெருநாயை அடித்து கொடுமைப்படுத்திய பிஜு தன்னுடைய வீட்டிலிருந்து தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனபோதும், தெருநாயை ஈவு இரக்கமில்லாமல் அடித்து கொடுமைப்படுத்தியதற்காக பிஜு மீது, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகிறார்கள்.