பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்- இளைஞருக்கு வலைவீச்சு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் பிளஸ்-2 முடித்து விட்டு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அந்த மாணவியை நாகர்கோவிலில் ஓட்டலில் வேலை பார்த்த ஊழியர் மைக்கேல் பிரபாகரன் என்பவர் கடத்திச் சென்றார்.
இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த மாணவியையும், மைக்கேல் பிரபாகரனையும் மீட்டனர்.
இருவரையும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மைக்கேல் பிரபாகரன் மீது கோட்டார் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியிடம் நாகர்கோவில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மைக்கேல் பிரபாகரனை ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மாணவி தனக்கு மருத்துவ பரிசோதனை வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனிடையே நாகர்கோவில் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, கோட்டார் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: நான் அண்ணா பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது செல்போனில் இளைஞர் ஒருவர் பேசினார். அவர் கடத்தப்பட்ட கோட்டார் மாணவி வழக்கில் போலீசார் பணத்தை பெற்றுக்கொண்டு அலைகழித்தனர்.
தற்போது மகளிர் போலீசாரும் அலைகழித்தால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறி இருந்தார்.
இம்மனுவை விசாரித்த சப்- இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் சப்- இன்ஸ்பெக்டரை மிரட்டிய செல்போன் எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.