500 சட்டவிரோத கருக்கலைப்புகள்... திருவண்ணாமலை பெண் டாக்டருக்கு போலீஸ் வலை
திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக 500 கருக்கலைப்புகளை செய்த பெண் டாக்டர் செல்வாம்பாளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
திருவண்ணாமலை: மத்திய மருத்துவ குழுவினரின் அதிரடி புகாரைத் தொடர்ந்து சட்டவிரோதமாக 500 கருக்கலைப்புகளை செய்த பெண் டாக்டர் செல்வாம்பாளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. நகர் பகுதியில் மட்டும் 15 முதல் 20 ஸ்கேன் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று பரிசோதனை செய்வதாகவும், இந்த ஸ்கேன் சென்டர்களின் துணையுடன் பல மருத்துவமனைகளில் கருக்கலைப்பது நடப்பதாகவும் டெல்லி மருத்துவ குழுவினருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதனைத்தொடர்ந்து டெல்லி குடும்ப நல துணை இயக்குனர் அஜய்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய மருத்துவர் குழுவினர் திருவண்ணாமலையில் உள்ள ஸ்கேன் சென்டர்களில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி ஸ்கேன் சென்டர்கள் செயல்படுவதாகவும், கரு கலைப்புக்கு உடந்தையாக மருத்துவர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள குழந்தை, பெண் குழந்தை என கண்டறிந்தது அவற்றை அழித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய உடந்தையாக டாக்டர் செல்வாம்பாளை என்பவர் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த ஸ்கேன் சென்டர் மற்றும் மருத்துவமனை ஒன்றுக்கும் சீல் வைத்த அதிகாரிகள், மேலும் 3 சென்டர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் 500க்கும் மேற்பட்ட கருக்கலைப்புகளை செய்த டாக்டர் செல்வாம்பாள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழகத்திலேயே திருவண்ணாமலையில் தான் அதிகளவு கருக்கலைப்புகள் நடப்பதாகவும் இதன் பின்புலத்தில் உள்ள நெட்வெர்க் குறித்து தீவிர விசாரணையில் சுகாதாரத்துறையினரும் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.