"3 கொலை ஸ்டீபன்" பதுக்கிய 400 கிலோ பொட்டாசியம் சயனைடு எங்கே? திணறும் போலீஸ்
சென்னை: சென்னையில் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபன் ராஜ் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் 400 கிலோ பொட்டாசியம் சயனைடு எங்கே என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபனுக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்திருக்கிறது. இதற்கு இடையூறாக இருந்த உறவினர்கள் உட்பட 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்தார்.
இது தொடர்பான வழக்கில் கைதாகி தற்போது புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விஷ ஊசிக்கு பயன்படுத்திய பொட்டாசியம் சயனைடு வாங்கியதாக கூறப்படும் மும்பையில் உள்ள கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.
அக் கடையின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 400 கிலோ பொட்டாசியம் சயனைடு விஷத்தை ஸ்டீபன் ராஜ் வாங்கியுள்ளதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஸ்டீபனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் வீட்டருகே சுற்றித்திரிந்த பல நாய்களுக்கும், தெருவில் படுத்து உறங்கும் ஏழை மக்களுக்கும் விஷ ஊசியைப் போட்டு கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தற்போது புழல் சிறையில் ஸ்டீபன் ராஜ் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பதுக்கி வைத்திருக்கும் 400 கிலோ பொட்டாசியம் சயனைடு எங்கே என போலீசார் தேடி வருகின்றனர்.