கல்லூரி மாணவியைத் தாக்கி கவரிங் செயினைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடர்கள்...!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை தாக்கி கவரிங் நகையைப் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி முடிந்து மெஞ்ஞானபுரம்-சாத்தான்குளம் பகுதியில் உள்ள தனது ஊருக்கு சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
நங்கைமொழி பகுதியில் சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து அவரை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த செயினை தங்கம் என நினைத்து பறித்து சென்றனர். பின்னர் வீடு திரும்பிய மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவிக்கவே அவர்கள் அது கவரிங் நகை என்பதால் புகார் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வீடுகளை உடைத்து கொள்ளையடிப்பது, தனியாக இருக்கும் பெண்களை, தனியாக செல்வோரை வழிமறித்து கொள்ளையடிப்பது, செயின் பறிப்பு சம்பவங்கள் தற்போது வாடிக்கையாகி விட்டது.
பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடி அமைத்துள்ள போலீசார், உயர் அதிகாரிகள் உத்தரவிடும் நேரங்களில் மட்டுமே வாகன தணிக்கை செய்கின்றனர். இதனால் இது போன்ற நிகழ்வுகள் பெருகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஓடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது.