கட்சியை விட்டு தூக்கியதால் டிடிவி மீது கோபம்.. சொந்த கார் மீதே குண்டு வீசிய புல்லட் பரிமளம்!
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீடு முன் நிறுத்தப்பட்டு இருந்த காரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வெடித்துள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீடு முன் நிறுத்தப்பட்டு இருந்த காரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வெடித்துள்ளது. இந்த கார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளத்தின் கார் ஆகும்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புல்லட் பரிமளத்தை தற்போது போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
ஏற்கனவே முன்னாள் கவுன்சிலர் புல்லட் பரிமளம் பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்து கட்சிகளிடையே கவனம் ஈர்த்து இருக்கிறார். இவர் செய்த சில மோசமான, சில காமெடியான நிகழ்வுகளுக்காக இவர் மீது வழக்கும் பதியப்பட்டு இருக்கிறது.
அவருடைய கார்தான்
டிடிவி தினகரன் வீட்டு வாசலில் இருந்த காரில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முன்னாள் அமமுக உறுப்பினர் புல்லட் பரிமளம் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த காரே அவருடைய கார்தான். ''அந்தக் குழந்தையே நீங்கதான் பாஸ்'' என்பது போல, அவர் தன்னுடைய காரில்தான் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார். 10 நாட்களுக்கு முன் கட்சியை விட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த செயலை செய்துள்ளார்.
அம்மா கட் அவுட்
இதற்கு முன்பே இவர் ஜெயலலிதா இருந்த போது கட் அவுட் வைத்து பலமுறை புகழ் பெற்று இருக்கிறார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும்முன் இவரே, ஜெயலலிதா விடுதலை ஆனார் என்று கட் அவுட் வைத்து பீதி கிளப்பினார். அதேபோல் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் வெளியேறினார் ஜெயலலிதா. ஆனால் அப்போது அதிமுக தலைமை அவரை அழைத்து நேரில் கண்டித்தது.
இன்னும் செய்தார்
ஆனால் அவர் அதோடு நிறுத்துவதாக இல்லை. அதற்கு அடுத்து நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் 1,68,099 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார், என்று தேர்தல் முடிவிற்கு முதல் நாளே கட் அவுட் வைத்து மீண்டும் சர்ச்சைக்கு உள்ளானார். எல்லாவற்றிக்கும் மேலாக, அம்மாவிற்காக பேருந்தை கொளுத்தி ஜெயிலுக்கு போன தொண்டன் என்று பேனர் வைத்து தலைமையின் கடும் கோபத்திற்குள் உள்ளானார்.
சிவன்
முக்கியமாக சங்கராச்சாரியார் கைது ஆன போது, ஜெயலலிதா முன் அவர் கை விலங்கோடு இருப்பதாக கட் அவுட் வைத்தார். இதற்கு சங்கராச்சாரியார் சிஷ்யர்கள் வழக்கு தொடுத்தனர். அப்போது, சிவன்தான் தன்னிடம் இப்படி எல்லாம் கட் அவுட் வைக்க சொல்கிறார் என்று பெரிய குண்டை தூக்கி போட்டு அதிர்ச்சி கிளப்பினார். இப்போது உண்மையாக குண்டை தூக்கி போட்டி அதிர்ச்சி கிளப்பி உள்ளார்.