நிர்மலா தேவி விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர் - ஏப்.28 வரை நீதிமன்ற காவல்
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை விருதுநகர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
Recommended Video
விருதுநகர் : பேராசிரியை நிர்மலா தேவியிடம் இரண்டாவது நாளாக இன்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளிடம் எதுவும் தவறாக பேசவில்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். நிர்மலாதேவியை விருதுநகர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி. தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பேசிய அவர், பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமீபத்தில் வெளியானது.
இது சமூக வலைதளங்களில் பரவியது. ஊடகங்களில் செய்தி வெளியாகவே இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
நிர்மலா தேவி கைது
முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு
இதனை அடுத்து திருச்சுழி காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி மதி அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினார்.
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், ஏடிஎஸ்பி மதி, டிஎஸ்பி தனபால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். இரண்டாவது நாளான இன்றும் நிர்மலா தேவியிடம் மதி விசாரணை மேற்கொண்டார். நிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், முழு விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்படுவதாகவும் மதி கூறினார்.
நிர்மலா பின்னணியில் யார்
மாணவிகளிடம் எதுவும் தவறாக பேசவில்லை என பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலம் அளித்துள்ளார். நிர்மலாதேவியை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துவர பேராசிரியை நிர்மலாதேவியை தூண்டிய உயர் அதிகாரிகள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஏப்ரல் 28 வரை நீதிமன்ற காவல்
பேராசிரியை நிர்மலாதேவியை காவல்துறையினர் விருதுநகர் மாஜிஸ்திரேட் மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்மலா தேவியை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.