இமானுவேல் சேகரன் 60ஆவது நினைவு தினம்... பலத்த போலீஸ் பாதுகாப்பில் பரமக்குடி!
இமானுவேல் சேகரனின் 60ஆவது நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுவதால், பரமக்குடியிலும் அதன் சுற்றுவட்டரப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2446 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 60ஆவது நினைவு தினமானது இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விழாவில் பங்குபெற சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்த செல்வது வழக்கம்.
அதனையொட்டி வன்முறைகள் ஏதுவும் ஏற்படாமல் இருக்க, அங்கு மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் 3 ஏ.டி.எஸ்.பி, 13 டி.எஸ்.பி, 57 இன்ஸ்பெக்டர்கள், 180 சப் இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 2446 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 16 செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சனைக்குரிய வழித்தடங்களில் உள்ள 6 செக்போஸ்டுகள் போக்குவரத்து துறை இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, வந்து செல்லும் வாகனங்கள் குறித்த முழுமையான தகவல்கள் சோதிக்கப்பட்ட பின்னரே வாகனம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் ஆட்சியர் லதா விடுமுறை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏற்கனவே செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.