சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ராம்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்தனர். மனு விசாரணைக்கு வந்த போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்த போலீசார் எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராம்குமார் வழக்கறிஞர் ஆட்சேபனை மனு தாக்கல் செய்த நிலையில், 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன். இவரது மகள் சுவாதி ,24. செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் ,24 என்ற வாலிபரை கைது செய்தனர். அப்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் ராம்குமாருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுவாதி கொலையில் ராம்குமார்தான் கொலையாளி என்று போலீஸ் தரப்பு கூறி வருகிறது. அதே நேரத்தில் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
அடையாள அணிவகுப்பு
சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆர். சங்கர் தலைமையில் நேற்று காலை புழல் சிறையில் கொலையாளியை அடையாளம் காணும் அணிவகுப்பு நடந்தது. 40 பேர் தேர்வு செய்து, அதில் ராம்குமார் உள்பட 20 பேரை வரிசையாக நிறுத்தினர். அவர்களில் கொலையாளியை அடையாளம் காட்ட சாட்சிகள் அழைக்கப்பட்டனர்.
அடையாளம் காட்டிய தந்தை
சுவாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன், நுங்கம்பாக்கத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் சிவகுமார் மற்றும் சில சாட்சிகளும், கோர்ட் உதவியாளர் தனபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கொலையாளியை சாட்சிகள் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
போலீஸ் மனு தாக்கல்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகலில் சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராம்குமார் ஆஜர்
விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ராம்குமாரை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வக்கீல் ஆட்சேப மனு
ராம்குமாரை போலீஸ் காவலில் அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து அவரது வழக்கிறஞர் மனுதாக்கல் செய்துள்ளார். ராம்குமார் உடல் ரீதியாகவும், மன ரதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தாக்கல் செய்துள்ள ஆட்சேபனை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
3 நாள் போலீஸ் காவல்
இந்த நிலையில் ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தார். தினசரி 1 மணி நேரம் ராம்குமாரின் வழக்கறிஞர் சந்திக்கவும், ராம்குமாருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ராம்குமாரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
உண்மைகள் வெளிவரும்
சுவாதி கொலை வழக்கு விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள போலீஸ் விசாரணையில் சுவாதியை எதற்காக ராம்குமார் கொலை செய்தார் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் தெரியவரும்.