உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதியின் தந்தை வீட்டில் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது போலீஸ்!!
மதுரை: உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதியின் தந்தை பாண்டி வீட்டில் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெயரில் பேரவை ஒன்றை தொடங்கியவர் நீதிபதி. இதனாலேயே சட்டசபை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து வெற்றியும் பெற்றுவிட்டார்.
தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்ட திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கத்துக்கு உசிலம்பட்டியில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் உள்ள கணவாய்பட்டியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் கணவாய்பட்டிக்கு சென்று பாண்டி என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து சேடபட்டி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்த பின்னர்தான் அது எம்.எல்.ஏ. நீதிபதியின் தந்தை வீடு என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. நீதிபதியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? என்பது சந்தேகமே என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.