ஹெல்மெட் ரெய்டு… 80000 பேரிடம் ஆவணங்களுடன் வாகனங்கள் பறிமுதல்- தட்டுப்பாடு தீருமா?
சென்னை: தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 80 ஆயிரம் பேரிடம் ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல கடைகளில் ஹெல்மெட் 2 மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டது. மீண்டும் தட்டுப்பாடு எழுந்துள்ளதால், டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய இடங்களில் ஹெல்மெட் ஆர்டர் கொடுத்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று 5 ஆயிரம் இடங்களில் போக்குவரத்து போலீஸார் சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வந்த 80 ஆயிரம் பேரை பிடித்தனர். இதில் 42 ஆயிரம் பேரிடம் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாத 38 ஆயிரம் பேரிடம் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களும், வாகனங்களும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அங்கு ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதையும், ஒரிஜினல் ஆவணங்களையும் காட்டி பறிமுதல் செய்யப்பட்டதை மீட்டுக்கொள்ளலாம். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அபராதம் விதிக்கச் சொல்வார். அந்த அபராத தொகையையும் கட்ட வேண்டும். சில நியாயமான காரணங்களை நாம் கூறினால் அவற்றை ஏற்று மாஜிஸ்திரேட் மன்னிப்பும் வழங்கலாம்.
ஹெல்மெட் தட்டுப்பாடு
கடந்த 1 வார காலமாகவே ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சில கடைக்காரர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலமும், ரெயில்கள் மூலமும் ஹெல்மெட்டை வரவழைத்து விற்பனை செய்தனர்.
இரு மடங்கு விலை உயர்வு
ஹெல்மெட் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல கடைகளில் ஹெல்மெட் 2 மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டது. விமானங்களில் வரவழைக்கப்பட்டதால் ஹெல்மெட் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் ஹெல்மெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
ஆந்திராவிலும் தட்டுப்பாடு
இதையடுத்து விமானம் மூலம் ஹெல்மெட் கொண்டு வருவது நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஹெல்மெட் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆந்திராவிலும் நேற்று முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதால் அங்கிருந்தும் ஹெல்மெட்டை வரவழைக்க முடியவில்லை. பெரும்பாலான கடைகளில் கடந்த 2 நாட்களாக ஹெல்மெட் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வெளிமாநிலங்களில் ஆர்டர்
போலீசாரின் கெடுபிடியை அடுத்து நேற்று ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைகளில் குவிந்தனர்.டெல்லி, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டாலும் தற்போதுள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
விரைவில் தட்டுப்பாடு நீங்கும்
தற்போது மீண்டும் டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய இடங்களில் ஹெல்மெட் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், அதை லாரி மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த ஹெல்மெட்டுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வந்த பின்னர் ஹெல்மெட் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும். வாகன ஓட்டிகள் விரும்பும் வகையில் விலையும் குறையும் என்றும் ஹெல்மெட் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.