புதுக்கோட்டையில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த வீட்டில் இருந்து லேப்டாப், பென் டிரைவ் பறிமுதல்!
புதுக்கோட்டையில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 லேப்டாப் 5 பென் டிரைவ் ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை: மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 லேப்டாப் 5 பென் டிரைவ் ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் வெற்றி வீரபாண்டியன் என்பவரது வீட்டில் நக்சலைட்டுகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக வெற்றி வீரபாண்டியன் இவரது சகோதரர் தசரதன், தசரதனின் மனைவி செண்பகவல்லி ஆகிய மூவரையும் 10-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 3 மாதங்களாக புதுக்கோட்டை, கோவில்பட்டி பகுதியில் தசரதனும் இவரது மனைவி செண்பகவள்ளியும் புதுக்கோட்டையில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை பார்த்தது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நக்சலைட் பிரிவு போலீஸார் மற்றும் திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீசார் புதுக்கோட்டையில் நேற்று இரவு முதல் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர் மேலும் கைது செய்யப்பட்டுள்ள வெற்றிவீரபாண்டியன் தசரதன் மற்றும் செண்பகவள்ளியை நேற்றிரவு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கோவில் பட்டிக்கு அழைத்து வந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்ததோடு அக்கம்பக்கதில் உள்ளவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 3 மாவோயிஸ்டுகளையும் புதுக்கோட்டை காவலர் சமுதாயகூடத்தில் வைத்து தீவிர விசாரணை செய்தனர். அவர்களிடம் புதுக்கோட்டையில் யாராவது பயிற்சி பெற்றுள்ளனரா அல்லது கூட்டாளிகள் யாராவது உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டது.
விசாரணைக்கு பிறகு மதியம் 3 மாவோயிஸ்டுகளையும் மீண்டும் திருவள்ளுர் கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்ற அழைத்து வந்த போது அவர்கள் அரசிற்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனையடுத்து அவர்கள் வேனில் ஏற்றி திருவள்ளூருக்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். மேலும் அவர்கள் அந்த வீட்டில் செய்த சோதனையில் 3 லேப்டாப் 5 பென்டிரைவ் ஹார்டுடிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பல முக்கிய தடயங்கள் மற்றும் குறிப்புகள் இருந்ததாக தெரியவந்துள்ளது..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் டிஎஸ்பி புகழேந்தி மாவோயிஸ்டுகளின் தொடர்பு குறித்து பல இடங்களில் விசாரணை செய்ய வேண்டியுள்ளது. கூட்டாளிகள் குறித்தும் தேடவேண்டியுள்ளது என்றார். விசாரணையின் விபரங்களை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் டிஎஸ்பி புகழேந்தி கூறினார்.