சங்கர் ஆணவ கொலை.. கெஞ்சி கேட்டும் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்க காரணம் என்ன? அரசு வக்கீல் விளக்கம்
Recommended Video
திருப்பூர்: கவுசல்யா தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அரசு வழக்கரிஞர் சங்கரநாராயணன் விளக்கம் அளித்தார்.
திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், கவுசல்யா தந்தை சின்னசாமி, இவர்கள் இருவரையும் கொலை செய்ய கூலிப்படையை ஏவினார்.
படுகொலை
கடந்த ஆண்டு கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது. இதில் கவுசல்யா தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். சங்கர் மரணமடைந்தார்.
அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார். ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அரசு வழக்கறிஞர்
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன் சிறப்பான வாதத்தை முன்வைத்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தந்துள்ளார். தீர்ப்புக்கு பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், சங்கர் ஆணவ கொலை வழக்கில் போலீஸ் திறமையாக விசாரித்தது. குற்றவாளிகள் கைது செய்த பிறகு இதுவரை ஒருவருக்கு கூட ஜாமீன் வழங்க முடியாத அளவுக்கு ஆதாரங்களை திரட்டி அளித்தது காவல்துறை.
விடாமல் போராடிய போலீஸ்
வழக்கமாக கொலை வழக்குகளில் 3 மாதங்களில் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியேறுவது வழக்கம். ஆனால், உடுமலைப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் அவரே இந்த விசாரணையின் முன்னின்று நடத்தி, ஜாமீன் வழங்கவிடாமல் என்ன ஆதாரங்களை அளிக்க வேண்டுமோ அதை செய்தார். ஹைகோர்ட் வரை சென்று போராடினார்.
காவல்துறை திறமை
வன்கொடுமை தடுப்பு சட்டமும் இந்த வழக்கில் போடப்பட்டது. டிஎஸ்பி விவேகானந்தனுக்கு கண்டிப்பாக எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆதாரங்களை திறமையாக திரட்டிய காவல்துறைக்கு எனது பாராட்டு.
கடும் தண்டனை
இந்த வழக்கில் குறைந்ததபட்ச தண்டனையை வழங்க குற்றவாளிகள் தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தது. அதிகபட்ச தண்டனை கூடாது என அவர்கள் கோரினர். மகள் வேறு ஆணுடன் ஓடிப்போய்விட்ட கோபத்தில் கொலை நடந்துவிட்டது என எதிர்தரப்பு வாதிட்டது. ஆனால் நானோ, மகள் மீது கோபம் இருந்தால் ரெண்டு அடி அடித்து மகளை தன்னுடன் வைத்திருக்க வேண்டும். அல்லது பக்குவமாக பேசியிருக்க வேண்டும். பணத்தை கொடுத்து மகள் மீது பாசமே இல்லாமல் அவரையும், மருமகனையும் கொலையும் செய்ய சொல்லியுள்ளவர்களுக்கு கடும் தண்டனை அவசியம் என்று வாதிட்டேன். நீதிபதி அதை ஏற்றுகக்கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.