சுவாதி வழக்கை போல பாஜக பிரமுகர் கொலை வழக்குகளில் போலீஸ் வேகம் காட்ட வேண்டும்: தமிழிசை
திருவள்ளூர்: பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூரில் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் அனு சந்திரமவுலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தது பாராட்டுக்குரியது. ஆனாலும், மாநிலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் காவல்துறையால் கண்டு கொள்ளப்படாமலும், துப்பு துலக்கப்படாமலும் உள்ளன.
குறிப்பிடும் படியாக, பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் அதன் சகோதர இயக்கங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தொடர்பான கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் காவல்துறையில் போதுமான காவலர்கள் இல்லை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளே.
எனவே, இது தொடர்பாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து, காவல்துறையை மேம்படுத்த வேண்டும். குற்றச்சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால், பள்ளிகளில் தினந்தோறும் நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும். அப்போது தான் குற்றச்சம்பவங்கள் குறையும். இது தொடர்பாக கல்வித்துறை முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து வரும் ஆந்திர அரசின் செயல் கண்டனத்திற்குரியது. இதற்குக் காரணம் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், முறையாகக் கண்காணிக்காததும் தான் என்று கூறினார்.