போதையில் மதுபாட்டிலால் எஸ்.ஐ மண்டை உடைப்பு: அவிநாசி ஹோட்டல் உரிமையாளர் கைது
ஈரோடு: சுற்றுலா சென்ற இடத்தில் தகராறு செய்ததற்காக அவிநாசியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, குடிபோதையில் இருந்த அவர், கையிலிருந்த மதுபாட்டிலால் எஸ்.ஐ,யின் தலையில் தாக்கிய சம்பவத்தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப் பகுதி இயற்கை விரும்பிகளின் சுற்றுலாத்தளமாக உள்ளது. அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் ஏராளமான சொகுசு தங்கும் விடுதிகள் உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முந்தினம் அவிநாசியில் உணவு விடுதி நடத்தி வரும் மோகன சுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் கேர்மாளத்தில் உள்ள தனியார் ஆடம்பர விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
குடிபோதையில் நண்பர்கள் ஹோட்டல் நிர்வாகத்தினருடன் தகராறு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த ஹோட்டல் மேலாளர், ஆசனூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பர்களை ஜீப்பில் ஏற்றி ஆசனூர் காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வனப்பகுதியில், கெத்தேசால் என்ற இடத்தில் ஜீப் சென்று கொண்டிருந்த போது, முன் இருக் கையில் அமர்ந்திருந்த உதவி ஆய்வாளரின் மண்டையில் மது பாட்டிலை எடுத்து அடித்துள்ளார். இதில் எஸ்.ஐ. மண்டை உடைந்தது.
அப்போது, அவ்வழியாக வந்த ஆசனூர் ஊராட்சித் தலைவர் ஜடையன் மற்றும் கிராம மக்கள், உதவி ஆய்வாளரை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஆசனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்துள்ளனர்.