வேலைப்பளுவால் மன உளைச்சல்.. தாங்க முடியாமல் எஸ்ஐ தற்கொலை
பணிச்சுமையால் மன உளைச்சல் எற்பட்டு சென்னை கொளத்தூரில் சப் இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: கொளத்தூரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொளத்தூர் வெற்றிவேல் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,56. இவர் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.
ராமகிருஷ்ணனின் மனைவி பெயர் ஜெயந்தி. இவர்களுக்கு நரேந்திரன், முத்துசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் இறந்து விட்டார். அதனால் மனஉளைச்சலில் இருந்தார்.
அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாகவும் அவதிப்பட்டார். இதனால் அவரது மன உளைச்சல் அதிகரித்தது. இதனால் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். அங்கு படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலையில் பார்த்த போது அவர் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
காவல்துறையினருக்கு வேலை சுமை அதிகரித்து விட்டதால் 8 மணி நேரம் வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பணிச்சுமையால் சப் இன்ஸ்பெக்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.