தொடர்ந்து ஐசியூவிலேயே வைக்கப்பட்டிருக்கிறார் ராம்குமார்.. பாதுகாப்பு கருதி!
சென்னை: சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் ராம்குமார் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி அவரை கைதிகள் வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றவில்லை.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் நெல்லை மாவட்டம் மீனாட்சி புரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்தபோது அவர் தனது தொண்டையில் பிளேடால் அறுத்துக் கொண்டதாக போலீஸார் கூறினர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது ராம்குமார் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தொடர்ந்து ஐசியூவிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நலமுடன் இருப்பதாகவும், காயம் வேகமாக ஆறி வருவதாகவும், மருத்துவமனை டீன் கூறியுள்ளார். இருப்பினும் அவரை இதுவரை கைதிகள் வார்டுக்கு மாற்றவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடலாம் என்று கருதப்படுவதால் தொடர்ந்து அவரை ஐசியூவிலேயே வைத்திருக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் டாக்டர்கள் அவரை இன்னும் கைதிகள் வார்டுக்கு மாற்றாமல் வைத்துள்ளனர்.
ராம்குமார் ஏதாவது செய்து விடக் கூடாது என்பதால் ராம்குமாரை 24 மணி நேரமும் போலீஸாரும், மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.