காதலில் விழுந்த மைனர் பெண்ணுக்கு வேறொருவருடன் திடீர் திருமணம் – தடுத்து நிறுத்திய போலீஸ்!
தேனி: தேனியில் 18 வயது நிரம்பாத இளம்பெண் ஒருவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த சாமிபிள்ளை. இவருக்கு 16 வயது நிரம்பாத மகள் ஒருவர் உள்ளார்.
அப்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஜில்லாமணி என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
காதல் விவகாரம்:
இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. எனவே இருவீட்டாரும் ஒன்றுகூடி பேசி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
திடீர் திருமணம்:
அதன்படி கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதுகுறித்து தேனியில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவு சமூகநலத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
சமூக ஆர்வலர்கள் தகவல்:
அதனை தொடர்ந்து சின்னமனூர் போலீசாருக்கும் மகளிர் முன்னேற்ற சங்கத்தினருக்கும், சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கன்னிசேர்வைபட்டிக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் சென்றனர்.
மைனர் திருமணம் நிறுத்தம்:
அங்கு நடக்க இருந்த மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதோடு பெற்றோரை அழைத்து பெண்ணுக்கு 18 வயது முடிந்தபின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.