வாலிபரிடம் ரூ.1000 லஞ்சம்: வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ - போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி: வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வாலிபரிடம் ரூ.1000 லஞ்சம் கேட்ட எஸ்.ஐ அருணாசலத்தை திருநெல்வேலி சரக டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எபனேசர். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். அவரிடம் பாளை அரசு மருத்துவமனையில் நர்சிங் படிக்கும் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் சமையல் செய்வதற்கான எலக்ட்ரிக் அடுப்பு பழுது பார்க்க கொடுத்திருந்தனர்.
அதை எபனேசர் முறையாக பழுது பார்க்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி மாணவர் தனது நண்பர்களுடன் சென்று கேட்டார். அப்போது அவர்களிடையே தகராறு முற்றியது. இந்த தகராறில் மாணவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தான் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும், தன்னை யாரும் தாக்கவில்லை என்றும் மாணவர் வாக்குமூலம் கொடுத்ததோடு, இதுபற்றி வழக்கு எதுவும் தேவையில்லை என எழுதி கொடுத்தார்.
இதனிடையே நடந்த சம்பவத்தை ஹைகிரவுண்டு போலீஸ் சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் அருணாசலம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எபனேசரை அழைத்து நடந்த விபரத்தை கேட்டனர். அதற்கு எபனேசர் தகராறு ஏற்பட்டது உண்மை தான். எங்களுக்குள் சமரசமாக செல்கிறோம். எனவே வழக்கு வேண்டாம் என கூறினாராம்.
அப்போது சப்.இன்ஸ்பெக்டர் அருணாசலம் அப்படியானால் அனாதை பிணத்தை புதைக்க ரூ. ஆயிரம் தேவைப்படுகிறது. கொடுத்து விட்டு செல் என கூறியதாக தெரிகிறது. அதற்கு எபனேசர் மறுத்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே அவரை எஸ்.ஐ. அருணாசலம் மற்றும் போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது எபனேசரின் மனைவியும் உடன் இருந்தார். இந்த விபரங்கள் எபனேசர் செல்போனில் உள்ள கேமரா மூலம் வீடியோ காட்சிகளாக பதிவானது.
இந்த காட்சிகள் நேற்று வாட்ஸ்அப்பில் உலா வந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபரம் நெல்லை சரக டி.ஐ.ஜி. முருகன் பார்வைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த டி.ஐ.ஜி. முருகன் உத்தரவிட்டார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட சப்.இன்ஸ்பெக்டர் அருணாசலத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.