பிரிவினையை தூண்டுகிறதா வேட்டி குறும்படம்: இயக்குனர் வ.கௌதமன் விசாரணைக்கு அழைப்பு!
சென்னை: 'வேட்டி' குறும்படம் இந்தியாவில் பிரிவினையைத் தூண்டுவதாகவும், களங்கப்படுத்துவதாகக் கூறி அக்குறும்படத்தின் இயக்குனர் வ.கெளதமனை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
லயோலா கல்லூரி மாணவர்களுக்காக வேட்டி என்ற குறும்படத்தை கௌதமன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கும் கதையாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் டெல்லியை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது என்றும், ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றியும் வசனம் எழுதப்பட்டுள்ளது. இந்த குறும்படம் யு டுயூப்பில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இயக்கிய கௌதமனை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் வ.கௌதமன், "லயோலா கல்லூரி மாணவர்களுக்காக நான் இயக்கிய 'வேட்டி' குறும்படம் தமிழ்நாடு, தமிழீழம், இழந்த சிதைந்த உரிமைகளை பேசியதற்காக, நமது உணர்வை வெளிப்படுத்தியதற்காக, சென்னை காவல்துறை விசாரணைக்கு அழைத்திருக்கிறது!
'வேட்டி' குறும்படம் இந்தியாவை களங்கப்படுத்துவதாக உள்ளது எனக் கூறி என்னை, 'சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம்' இன்று 4 மாலை (27.10.2015) விசாரணைக்கு அழைத்திருக்கிறது!. படைப்பு சுதந்திரத்திற்கு கிடைத்த பரிசாக ஏற்று, இன்று விசாரணைக்குச் செல்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.