அன்று கல்வீச்சு-இன்று ஐடி ரெய்டு- பதற்றம் ஏற்படுத்தும் தீபா-மாதவன் கோஷ்டி மீது நடவடிக்கை பாயுமா?
பணமோசடி, போலி நாடகங்களை அரங்கேற்றி வரும் தீபா, மாதவன் கோஷ்டி மீது கடும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: அரசியலை பயன்படுத்தி பண மோசடி, பரபரப்பு நாடகங்கள் என தொடர்ந்து கூத்துகளை நடத்தி மக்களிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த போது அவரது முக சாயலில் உள்ள அண்ணன் மகள் தீபாவை அதிமுக தொண்டர்களில் ஒருபகுதியினர் தலைவியாக ஏற்றனர். இதனால் தீபாவின் வீட்டு முன்னர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.
ஓட்டுநர் ராஜா உடந்தை
ஆனால் அப்பாவி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை அப்படியே பணமாக்கி கொள்ளையடிக்க திட்டம் போட்டது தீபா குடும்பம். இதற்கு தீபாவின் கணவர் மாதவன், ஓட்டுநர் ராஜா ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.
மோசடி புகார்கள்
கட்சியில் பதவி தருகிறேன்; அமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் என கூறி பல கோடி ரூபாயை அதிமுக பிரமுகர்களிடம் இந்த கும்பல் சுருட்டியது. இதனால் தீபா மீது ஏராளமான பண மோசடி புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
தனிக்கட்சி தொடங்கம்
ஒருகட்டத்தில் தீபா வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு கணவர் மாதவன் தப்பி ஓடி தனிக்கட்சி தொடங்கி காமெடி நாடகத்தை நடத்தினார். பின்னர் இருவரும் ஜெயலலிதாவின் சமாதியில் இணைந்ததாக அறிவித்தனர்.
மீண்டும் வந்த ராஜா
பின்னர் பண மோசடி புகாரில் சிக்கிய ஓட்டுநர் ராஜாவை ஓரம் கட்டுவதாக அறிவித்தார் தீபா. அடுத்த சில நாட்களிலேயே ராஜாவை தமது கட்சியில் இணைத்துக் கொண்டார் தீபா.
நாடகமாடிய மாதவன்
இந்நிலையில்தான் வருமான வரித்துறை சோதனை நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எதுவுமே தெரியாத அப்பாவியைப் போல மாதவன் செய்தியாளர்களிடம் நடித்தார். ஆனால் போலி வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ்குமார் என்கிற பிரபாகரன், மாதவனின் நாடகத்தை அம்பலப்படுத்திவிட்டார்.
முட்டாளாக்கும் மாதவன் கோஷ்டி
இதனால் மாதவன் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். ஏற்கனவே தமது வீட்டின் மீது தீபா கோஷ்டியே கல்லெறிந்துவிட்டு யாரோ செய்துவிட்டார்கள் என நாடகமாடியது. இப்போது வருமான வரித்துறை நாடகம். மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு நாடகமாடும் இந்த தீபா- மாதவன் கோஷ்டி மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்து அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.