வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள்.. கடலோரங்களில் தீவிர தேடுதல்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பெரு மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கடலோரமாக கிடக்கிறதா என்பதை ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், பாலாறு மற்றும் கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் அடித்து செல்லப்பட்டனர்.
குறிப்பாக அடையாறு வெள்ளத்தில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அடித்துச் செல்லப்பட்டவர்களில் சிலரின் உடல்கள் கிழக்கு கடற்கரையோரம் ஒதுங்கியது. இலங்கையிலும் உடல் சிக்கியது. மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் பலரை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் உடல்கள் மாமல்லபுரம் கடல் பகுதியில் ஒதுங்கி உள்ளதா என்று கண்டறிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் இழுத்து உயிருடனோ, உயிரிழந்தோ யாரேனும் கால்வாய், கடற்கரை பகுதிகளில் காணப்படுகிறார்களா? என கல்பாக்கம் அணுமின் நிலையம், கோவளம், மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் ஹெலிகாப்டர், நவீன ஜீப் மற்றும் விசைப்படகுக ளில் சென்று கடலோர பாதுகாப்பு படையினர் தேடினர். தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட வீரர்கள் கோவளம், மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் உதவியுடன் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.