லீவு போடாதீங்க... எங்கேயும் தடியடி நடத்தாதீங்க - காவல்துறையினருக்கு கடும் உத்தரவு
சட்டசபை முடியும் வரை அத்தியவாசிய தேவைகள் தவிர எதற்காகவும் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று சென்னை காவல்துறையினருக்கு மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் போது ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவை நடக்கும் நிலையில் காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள உத்தரவு:
•போலீசார் மற்றும் அதிகாரிகள் யாரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது.
•லத்தி ஜார்ஜ், கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
•லாக்கப் மரணத்தை தவிர்க்கும் வகையில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை மாலை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்திருக்க கூடாது.
• வரும் ஜூலை 19ம் தேதி வரை போலீசார் மற்றும் உயரதிகாரிகள் லீவு எடுக்க கூடாது.
• மாணவர்கள் தகராறு பிரச்சினை நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆகிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்.