ரூ25 கோடி மோசடி- "குமுதம்" வரதராஜனுக்கு எதிரான புகாரை விசாரிக்க புதிய குழு: ஹைகோர்ட் உத்தரவு
என்ன வழக்கு?
குமுதம் பத்திரிகையின் அதிகபட்ச பங்குதாரர் மற்றும் இயக்குநருமான ஏ.ஜவஹர் பழனியப்பன், கடந்த 2010-ஆம் ஆண்டு போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில் 1947-ஆம் ஆண்டு எனது தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வாரப் பத்திரிகையை நான் நடத்தி வருகிறேன். பத்திரிகை தொடங்கப்பட்டபோது பி.வி.பார்த்தசாரதி என்பவர் எனது தந்தையுடன் மேலாளராக பணிபுரிந்தார்.
பிறகு அவர் வெளியீட்டாளராக பதவி உயர்த்தப்பட்டார். பார்த்தசாரதி இறந்த பிறகு, அவரது மகன் பி.வரதராஜன், தனது குடும்பத்திற்கு சில பங்குகள் ஒதுக்க வேண்டும் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவருக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான மதிப்பை வரதராஜன் இதுவரை செலுத்தவில்லை.
பிறகு அலுவலகத்திற்கு நான் வராத நிலையில், அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிப்பதற்கான வாய்ப்பு வரதராஜனுக்கு கிடைத்தது. அப்போது, நிர்வாகத்தில் இருந்த வரதராஜன் மோசடியில் ஈடுபட்டார். அலுவலக நிதி ரூ. 25 கோடியை தவறாக பயன்படுத்தினார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் வரதராஜன் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வரதராஜனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வரதராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பு
அதன் பிறகு சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏ.ஜவஹர் பழனியப்பன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை.
2011-ஆம் ஆண்டு என்னிடமும் எனது குடும்பத்தினரிடமும் விசராணை செய்தார். அதன் பிறகு, எனது புகாரில் உண்மை இல்லை எனக் கூறி வழக்கை திடீரென முடித்து விட்டார். அதனால், விசாரணை அதிகாரியின் இறுதி ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நிறுவனத்தின் பணம் ரூ. 25 கோடியை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை. புகாருக்குத் தேவையான அனுமதிக்கக் கூடிய ஆதாரங்கள், ஆவணங்கள் ஏதும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
ஜவஹர் பழனியப்பன் முறையீடு- புது உத்தரவு
இந்த உத்தரவை ரத்து செய்யவும், புகார் தொடர்பாக மேலும் விசாரிப்பதற்கு வேறொரு விசாரணை அதிகாரியை நியமிக்கவும் உத்தரவிடக் கோரி குமுதம் பத்திரிகையின் இயக்குநர் ஏ.ஜவஹர் பழனியப்பன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, மனுதாரர் அளித்த புகாரில் உண்மை இல்லை எனக் கூறி முடித்து வைக்கப்பட்ட இறுதி அறிக்கை தவறானது. பெருநகர மாஜிஸ்திரேட் மனுதாரின் மனுவை பரிசீலிக்கத் தவறிவிட்டார். உண்மை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் அந்த வழக்கை முடிக்க அவர் உத்தரவிடவில்லை.
அதனால், விசாரணை அதிகாரியின் இறுதி அறிக்கையும், பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர் புகார் தொடர்பான ஆவணங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை செய்ய, புதிய குழு அமைப்பதற்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி உத்தரவிட வேண்டும்.
இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.