விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்.. பேராசிரியர் முருகன் உயிருக்கு ஆபத்து?.. உறவினர்கள் கலக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக சிறையில் உள்ள முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்களது போலீஸ் வாகனம் மீது வேறு ஒரு வாகனம் லேசாக உரசி விபத்தை ஏற்படுத்தியது.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் தவறான விஷயத்தை செய்யுமாறு கூறினார்.
கைது
இதற்கு மறுத்த மாணவிகளின் புகாரின்பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர்தான் மாணவிகளை தங்கள் ஆசைக்கு இணங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவருக்கும் ஆபத்து
இந்த நிலையில் தங்கள் உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக மூவருமே அவர்களது வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக மதுரை சிறையிலிருந்து நிர்மலா தேவி ஒரு வாகனத்திலும் முருகன், கருப்பசாமி ஒரு வாகனத்திலும் அழைத்து வரப்பட்டனர்.
பரபரப்பு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அவர்கள் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன்கோயில் அருகே எதிரே வந்த மினி டெம்போ வாகனம் லேசாக போலீஸ் வாகனத்தின் பக்கவாட்டில் உரசி விபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மினி டெம்போ வாகன ஓட்டுநரிடம் போலீஸார் தகராறு செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்து
இதுகுறித்து முருகன் உறவினர்கள் கூறுகையில் சிறையில் தங்களது உயிருக்கு ஆபத்து என்று முருகன் கூறினார். ஆனால் இந்த விபத்தை பார்க்கும் போதுதான் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவந்தது. விபத்து எதேச்சையாக நடந்தது போல் தெரியவில்லை. முருகனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் அனைத்தையும் பத்திரிகையாளர்கள் முன்பு கூறிவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாக ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இது போல் விபத்து ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது.