நெடுவாசல், கதிராமங்கலம், நாகை போராட்டக்காரர்களுக்கு தூத்துக்குடி படுகொலை அபாய மணி அடிக்கிறதா?
தூத்துக்குடி படுகொலைகள் நெடுவாசல், கதிராமங்கலத்துக்கு அபாய மணி அடிக்கிறதா?
Recommended Video
தஞ்சை: உலகையே உலுக்கிய ஜல்லிக்கட்டுப் புரட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை பணிய வைத்தது.. ஆனால் ஜல்லிக்கட்டு புரட்சி அடுத்த பாய்ச்சலாக அரபு வசந்தங்களைப் போல விஸ்வரூபமெடுக்கலாம் என்பதால் சட்டத்தை வளைத்துப் போட்டு அந்த புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது அரசு.
அன்று முதல் சென்னை மெரினாவை இழுத்துப் பூட்டி வைத்திருக்கிறது அரசு. மெரினாவில் 4 பேர் கருப்பு சட்டையுடன் ஒன்று கூடினாலே வெலவெலத்துப் போகிறது போலீஸ். இன்னமும் மெரினாவின் வாசல்கள் புரட்சியாளர்களுக்கு திறக்கவில்லை.
ஜல்லிக்கட்டு ஒடுக்குமுறைகளுக்குப் பின் தமிழகத்தில் தன்னெழுச்சி கிளர்ச்சியும் வராது புரட்சியும் பூக்காது என கொக்கரித்தன அரசுகள். அலங்காநல்லூரும் மெரினாவும்தான் போர்க்களங்களா?
தொடரும் கிளர்ச்சிகள்
இல்லையே.. நெடுவாசல்களும் கதிராமங்களும் புதிய புரட்சி களங்களாக உருவெடுத்தன.. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஓஎன்ஜிசிக்கு எதிராக கிளர்ச்சிகள் நாளும் நடந்தேறின..
தமிழகம் முழுவதும் போராட்டம்
இத்துடன் இணைந்து கொண்டது தூத்துக்குடி. ஸ்டெர்லைட் கிளர்ச்சி. தமிழகத்தின் திசையெங்கும் கிளர்ச்சிகள்.. அதுவும் மத்திய அரசுக்கு எதிராக, மத்திய அரசின் பங்காளிகளான பல்லாயிரம் கோடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக தமிழகம் தனலாய் தகித்தது.
பச்சை படுகொலை அரசு
இப்போது ஜல்லிக்கட்டுவில் காட்டப்பட்ட அரசு முகத்தின் அடுத்த கட்டத்தை அரங்கேற்றியுள்ளது. இந்திய நிலப்பரப்பில் எந்த மண்ணிலும் நிகழாத வகையில் வாழ்வுரிமைக்கு நியாயம் கேட்ட மக்களை ஈவிரக்கமே இல்லாமல் கேட்பார் எவருமே இல்லை என நினைத்து சட்டத்தை கீழே போட்டு மிதித்து காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள்.
அந்த கொடூரர்கள் யார்?
தமிழகத்தில் இனி போராடினால் படுகொலை என்கிற அடுத்த அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது படுகொலை செய்தது போலீசாரா? துணை ராணுவத்தினரா? மப்டியில் இலக்கு வைத்து கொன்ற கொடூரரர்கள் யார் என தெரியவில்லை?
அடுத்து எல்லை பாதுகாப்பு படையினரா?
அண்மையில்தான் டெல்டா மாவட்டங்களில் திடீரென பல்லாயிரக்கணக்கான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இப்போது தூத்துக்குடி மண்ணில் படுகொலைகள் நடந்தேறியிருக்கிறது. இது நெடுவாசலுக்கும் கதிராமங்கலத்துக்குமான எச்சரிக்கையா? தமிழகம் இன்னொரு காஷ்மீராக உருவெடுக்க வைக்கப்படுகிறதா? என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.. அனேகமாக ஒடிஷாவின் சத்தீஸ்கரின் தண்டேவடா, தண்டகாருண்யா காடுகளில் மாவோயிஸ்டுகளை ஒடுக்க முகாமிட்டிருக்கும் எல்லை பாதுகாப்புப் படையினர் தமிழகத்தில் கால்பதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது.