பாரபட்சமின்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. மக்கள் வெளியே வரவேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை!
பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற பேராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் இன்றும் தடியடி, துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்டவற்றை பிரயோகம் செய்துள்ளனர்.
வாகனத்திற்கு தீ வைப்பு
இதனைக் கண்டித்து மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. மேலும் காவல்துறையின் பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
போலீஸ் குவிப்பு
போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மைக் மூலம் எச்சரிக்கை
இந்நிலையில் தூத்துக்குடி நகராட்சி பகுதியில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலீசார் வேண்டுகோள்
பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கள் பீதி
போலீசாரின் இந்த எச்சரிக்கையால் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ என மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்றே தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.