உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை
உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
திருச்சி: உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் நேற்று 20வது தூணும் இடிந்து விழுந்து பாலம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலத்தின் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில் ஆர்ப்பரித்து செல்லும் நீரையும் இடிந்து விழுந்த பழைய இரும்பு பாலத்தையும் காண அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர். நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழலாம் என்பதால் பொதுமக்கள் பாலத்தின் அருகே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில் போலீசார் மற்றும் அரசின் அலட்சியமே பாலம் இடிந்து விழ காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு முறையாக பராமரித்திருந்தால் பாலம் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.