முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி பரப்புபவர்கள் கண்காணிப்பு - சென்னை போலீசார்
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வநர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவோரைக் கண்காணித்து வருவதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.
முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது. ஆனால் முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தியாக தினமும் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக வாட்ஸ்ஆப்பில் இந்த தவறான தகவல்கள் அதிகளவில் பரவுகின்றன. இதுதான் அதிகாரப்பூர்வ செய்தி என முதல்வர் குறித்த ஒரு செய்தியை நேற்று முன் தினத்திலிருந்து பரப்பி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் தனது முகநூலில், ஜெயலலிதா உடல்நிலை பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தவறான தகவல்களை பரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை நகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பிட்ட சில பேர்தான் இதுபோன்ற வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என்பதை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.