"இல்லத்தரசிகளை" வைத்து வாடகைக்கு வீடு பிடித்து விபச்சாரம் நடத்திய போலீஸ் ஏட்டு... மதுரையில்!
மதுரை: மதுரையில் ஒரு நூதன விபசாரத்தை போலீஸார் கண்டுபிடித்து 3 பேரைக் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் போலீஸ்காரர் என்பது அதிர்ச்சிகரமானது. மற்ற இருவரும் குடும்பத் தலைவிகள் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி.
தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் என்ற 23 வயது மாணவர்தான் இந்த விபச்சாரக் கும்பல் சிக்க முக்கியக் காரணம். பாலமுருகனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பென்னாடம் ஆகும்.
இவர் தூத்துக்குடியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குப் போவதற்காக தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு வந்துள்ளார். அங்கு மாட்டுத் தாவணி பஸ் நிலையம் வந்த அவர் பஸ் ஏறக் காத்திருந்தார்.
அப்போது அவரிடம் 34 வயதான மாரிமுத்து என்பவர் அணுகியுள்ளார். என்னிடம் அழகு அழகான பெண்கள் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆசை காட்டியுள்ளார். இதையடுத்து முருகன் அவருடன் சென்றுள்ளார்.
மீனாம்பாள்புரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார் மாரிமுத்து. அங்கு பாலமுருகனிடம் இரண்டு நடுத்தர வயதுள்ள பெண்களைக் காட்டியுள்ளார். அவர்களைப் பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனக்கு வேண்டாம் என்று கூறி அங்கிருந்து வெளியேறி விட்டார்.
நேராக செல்லூர் காவல் நிலையம் சென்ற அவர் நடந்ததைக் கூறினார். புகாரும் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்.
விரைந்து வந்த போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் ரெய்டு நடத்தினர். அதில் 37 வயதான கலைச்செல்வி மற்றும் 32 வயதான பிரியா என்கிற ராதா ஆகியோர் சிக்கினர். இருவரும் திருமணமானவர்கள். கணவர், குழந்தைகளுடன் இருப்பவர்கள். இவர்களை மாரிமுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மாரிமுத்துவையும் போலீஸார் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். விசாரணை போலீஸாருக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. மாரிமுத்து ஒரு புரோக்கர் ஆவார். இவரை வைத்து விபச்சாரத்தை நடத்தி வந்தவர் பாலமுருகன் என்ற போலீஸ்காரர் ஆவார். இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருந்து வருகிறார்.
மீனாம்பாள்புரத்தில் விபச்சாரம் நடந்த வீடு ஒரு பிராஞ்ச்தானாம். இதே போல நகரில் பல இடங்களில் வீடுகளை வாடகைக்குப் பிடித்து விபச்சாரத்தை பெரிய அளவில் நடத்தி வந்துள்ளார் பாலமுருகன் என்ற விவரம் தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பாலமுருகனிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் எங்கெல்லாம் வீடு பிடித்து விபச்சாரம் செய்து வந்தார், அவரது தொழிலில் உதவியவர்கள் யார் யார், பெண்கள் குறித்த விவரம் உள்ளிட்டவற்றை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.