குடும்பத்தகராறு... ஆயுதப்படை காவலர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை: எங்களின் தற்கொலைக்கு காரணம் மனைவியின் குடும்பத்தினர்தான் என்று வாட்ஸ் அப்பில் வீடியோவும், தற்கொலை கடிதமும் எழுதி வைத்து வைத்து விட்டு ஆயுதப்படை காவலர் ஒருவர் மனைவியுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரை மாய்த்துக்கொண்ட காவலரின் பெயர் சவுந்திரபாண்டியன், 27. இவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். சென்னை வேப்பேரியில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றினார்.
கடந்த ஆண்டுதான் ராமநாதபுரத்தை சேர்ந்த சசிகலா,23 என்பவரை சவுந்திரபாண்டியன் திருமணம் செய்தார். கணவன் மனைவி இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்படவே, சசிகலா தனது தாய் வீட்டிற்குச் சென்றார். சவுந்தரபாண்டியன் காவலர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்புதான் சவுந்தரபாண்டியனுடன் சசிகலாவை சமாதானம் பேசி சேர்த்து வைத்தனர். திருவெற்றியூரில் வீடு பார்த்து குடித்தனம் வைத்தனர். மீண்டும் தகராறு ஏற்படவே, கடந்த 12ஆம் தேதி சசிகலா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை உறவினர்கள் மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எண்ணூர் போலீசார் அவரிடம் விசாரித்தனர். அதில், திருமணம் ஆன நாள் முதல், எனது கணவருக்கு என் மீது சந்தேகம் இருந்தது. இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு என்னை அடித்து உதைத்தார். அவரின் சந்தேக புத்தியால் நான் தற்கொலைக்கு முயன்றேன் என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சசிகலா. கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
சவுந்திரபாண்டியன் தனது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ அனுப்பி விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வீடியோவை பார்த்த நண்பர், உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கவே திருவெற்றியூரில் சவுந்தரபாண்டியனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
ஒரு அறையில் சவுந்திரபாண்டியன் தூக்கில் சடலமாக கிடந்தார். மற்றொரு அறையில் சசிகலா தூக்கு போட்டு, அந்த கயிறு அறுந்து கீழே சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சசிகலாவின் முகத்தில் பலத்த காயம் இருந்தது. இதனால், மனைவியை அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு, பின்னர் சவுந்திரபாண்டியன் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சவுந்தரபாண்டியன் அனுப்பிய வீடியோவில், எனக்கும், என் மனைவிக்கும் வாழ பிடிக்கவில்லை. எங்களது சாவுக்கு காரணம் மாமா ஆறுமுகம், அவரது மனைவி பிரேமா, சசிகலாவின் சித்தப்பா கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம், அம்மாஞ்சி ஐயா ஆகியோர்தான். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை அம்மா மன்னிக்க வேண்டும் என பேசியிருந்தார். சவுந்தரபாண்டியன் எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்திலும் இதே போலவே எழுதி வைத்துள்ளார்.
சவுந்தரபாண்டியன், அவரது மனைவி சசிகலாவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.