ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டி போலீஸ்காரர் பலி!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் போலீஸ்காரர் ஒருவர் பலியாகினார்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் நடந்த மஞ்சுவிரட்டின் போது காளை முட்டி காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசின் அனுமதியோடு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 40 காளைகள் வரை களத்தில் சீறிப் பாய்ந்தன.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஜெய்சங்கர் என்ற காவலர் ஈடுபட்டிருந்தார். திடீரென சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று காவலர் ஜெய்சங்கரின் கழுத்தில் மூட்டி தூக்கி வீசியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜெய்சங்கரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் அவசர கதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதிய ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு வேலிகள் அமைக்கபட்டிருக்க வேண்டும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அளவுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஆனால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாமல் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் உயரிழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.