ரூ.1,500 கோடி: பாதியில் எழுந்து சென்ற வைகோ.. பேட்டியின்போது என்ன நடந்தது? 'பாலிமர்' டிவி விளக்கம்
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ டென்சனாகி பேட்டியையே பாதியில் கேன்சல் செய்துவிட்டு தெறித்து ஓடிய நிகழ்ச்சி குறித்து பாலிமர் செய்தி ஆசிரியர் ஏ.எல். கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிமர் டிவிக்கு பேட்டியளித்த வைகோவிடம், மக்கள் நலக் கூட்டணியை உருவாக்க அதிமுகவிடம் ரூ1,500 கோடியை நீங்கள் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதில் டென்சனான வைகோ காலர் மைக்கை தூக்கி எறிந்துவிட்டு பேட்டியையே கேன்சல் செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தார்.
இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வைகோவும் விளக்கம் அளித்திருக்கும் நிலையில் பாலிமர் டிவி செய்தி ஆசிரியர் கண்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் கண்ணன் கூறியுள்ளதாவது:
திரு. வைகோ அவர்களுடன் ஒரு மணி நேர நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது.ஆனால் 15 நிமிடங்களோடு நேர்காணலை நிறைவு செய்ய வேண்டிய நிலை...
காரணம் நீங்கள் அறிந்ததுதான்.
பாலிமர் தொலைக்காட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. அனைத்து தலைவர்களையும் சமமாக மதிக்கிறது. குறிப்பாக திரு. வைகோ அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
நான் மதிக்கின்ற தலைவர்களில் அவரும் ஒருவர். திரு. வைகோ அவர்களை களங்கப்படுத்த வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். எனது கேள்வியை முழுமையாக கேட்பதற்கு முன்னதாகவே அவர் கோபப்பட்டு எழுந்தது துரதிஷ்டவசமானது.
சமூக வலைத்தளங்களையும் பத்திரிகைகளையும் மேற்கோள்காட்டி அவர் ஒரு குற்றசாட்டை முன் வைக்கும் போது அதே சமூக வலைத்தளங்களில் திரு வைகோ மீது வந்த குற்றச்சாட்டுக்களை அவரிடம் எடுத்து சொல்லும் நோக்கிலேயே நான் கேள்விகளை முன் வைத்தேன்.
மதிப்புக்குறிய திரு.வைகோ அவர்கள் பணம் பெற்றுவிட்டதாக நான் குற்றசாட்டை முன் வைக்கவில்லை.சமூக வலைத்தளங்களில் உங்கள் மீதும் ஒரு குற்றசாட்டு இருக்கிறதே அப்படி இருக்கும்போது சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான் எனது கேள்வியாக இருந்தது.
இந்தக் கேள்வி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே திரு. வைகோ அவர்கள் எழுந்து சென்றுவிட்டார். இது தான் நடந்தது.
மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற விசயங்களை தொகுத்து சம்பந்தபட்டவர்களிடம் கேள்விகளை முன் வைக்கிறோம். ஒரு ஊடகவியலாலனாக நானும் அதைத்தான் செய்திருக்கின்றேன்.
பாலிமர் நிர்வாகத்தைப் பொருத்தமட்டில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. நடு நிலையோடு செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். பாலிமர் அந்த பாதையில் தொடர்ந்து பயணிக்கும்.
இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.