நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.. சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
Recommended Video
சென்னை : நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 43, 051 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருத்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று பயணிகள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ போடுவது கட்டாயம்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து மார்ச் 11ம் தேதி வழங்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தார். தமிழகத்தில் 14-ஆவது ஆண்டாக போலியோ இல்லாத நிலையை உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு தனது அரசாணையில் தெரிவித்துள்ளது.