நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு வேண்டுகோள்!
தமிழகத்தில் முதற்கட்டமாக நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நாளையும் இரண்டாம் கட்டமாக வரும் 30ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை நாளையும், இரண்டாம் தவணை 30-ந்தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.