மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையை கண்டுபிடித்த கருணாநிதிக்கு சிதம்பரம் பாராட்டு
சிங்கங்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தான் இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்சி மையத்தை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
நான் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். அப்போது அவர் தமிழகத்தில் மட்டும் ஏன் நிறைய பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளது என்று என்னிடம் கேட்டார்.
அனைத்து மாநிலங்களிலுமே போலியோ உள்ளது என்று நான் அவரிடம் தெரிவித்தேன். இதையடுத்து தான் போலியோ ஒழிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் உள்ளது.
மக்கள் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளார்களா என்பதைத் தான் பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் கருப்பா, சிவப்பா என்று பார்க்கக் கூடாது என்றார்.
மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையை உருவாக்கிய திமுக தலைவர் கருணாநிதியை சிதம்பரம் பாராட்டினார்.