உங்க வீட்டு சுட்டிக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தாச்சா...?
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் போலியோ நோயை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 2 தவணைகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி நடந்தது.
அப்போது தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 70.65 லட்சம் குழந்தைகளில் 67.17 லட்சம் குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்கினர்.
இந்நிலையில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் இன்று நடக்கிறது. இதற்கென தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 43,051 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1,652 நடமாடும் மையங்கள், 1,000 நடமாடும் குழுக்கள் ஆகியவற்றின் மூலமும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகா தாரப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள், ஆசிரியர் கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத் துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணை படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள் புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் தடவை சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள் என அனைவருக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுபட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.