திமுகவை விட்டு விலகி வெகுதொலைவு சென்றுவிட்ட மாஜி 'புரபசர்'
திமுக தலைமைக்கு நெருக்கமான மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவர் கட்சியைவிட்டே விலகி வெகுதூரம் சென்றுவிட்டாராம்.
சென்னை: திமுக தலைமையின் நிழல்களில் ஒருவராக இருந்த அதி முக்கிய பிரமுகர் அக்கட்சியை விட்டே விலகி வெகுதொலைவு சென்றுவிட்டதுதான் இப்போது ஹாட் டாபிக்.
கொள்கைக்காரராக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டு ஒருகட்டத்தில் அசைக்க முடியாத அமைச்சராக, திமுகவின் குறுநில மன்னர்களில் ஒருவராக உயர்நிலைக்கு வந்தவர் அந்த அதிமுக்கிய பிரமுகர். இதன் உச்சகட்டமாக திமுக தலைமையின் நிழலாகவும் வளர்ந்தார்,
ஆனால் அண்மைக்காலமாக திமுகவை விட்டு விலகி அவர் வெகுதொலைவு பயணித்துவிட்டார். முதுபெரும் தலைவரின் நிழலாக இருந்த நம்மை கிள்ளுக்கீரை போல மாற்றி விட்டார்களே என்கிற அடுப்படி அரசியல் மீதான கோபம்தான் இதற்கு அடிப்படை காரணம் என்கிறார்கள்.
அதேசமயம், இன்னொரு பக்கம் இவர் "சைட்" எடுக்க, திமுக ஆட்சியில் குவித்த சொத்துகள், கல்வி நிறுவனங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் காரணம். அவரைப் பொறுத்தவரை திமுகவால் தனக்கு இனி தேறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆகையால் "நடிகர்" கட்சியில் ஐக்கியமாவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தியுள்ளாராம்.
இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்கிற தகவல் இவர் தற்போது இருக்கும் கட்சியின் தலைமையின் காதுகளுக்கு போய்விட்டது. இதன் உச்சம்தான் சட்டசபை வளாகத்தில் நடந்த விரும்பத்தகாத விவகாரம் என்கிறார்கள்.
அன்றோடு இவர் சட்டசபைக்கும் போவதில்லை... அறிவாலய பக்கமும் எட்டிப்பார்ப்பது இல்லை. இந்த நிலையில் தமது புது பிசினஸை வாடகை அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருக்கும் பிரமுகர் ஒருவரை வைத்து திறக்க செய்திருக்கிறார். இதனை முன்வைத்துதான் அண்ணன் ரொம்ப தூரமாக போயிட்டாரே என்கிற விவாதம் திமுகவில் நடைபெற்று வருகிறது.