பழ.கருப்பையா குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் அச்சுறுத்தலில் ஈடுபடுவது நியாயமா?... கி.வீரமணி
சென்னை: பழ.கருப்பையா குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல், வன்முறை, கலவரம், அச்சுறுத்தலில் ஈடுபடுவது எவ்வகையில் நியாயமாகும்? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் கடந்த சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து அதிரடியாக அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பழ.கருப்பையாவின் ராயப்பேட்டை இல்லத்தை மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்தன.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் தற்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.இ.அ.தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட திரு. பழ.கருப்பையா எம்.எல்.ஏ. அவர்கள், அதனை ஏற்று, ஜனநாயக மரபு காக்கும் நனி நாகரிக வகையில், தனது எம்.எல்.ஏ. பதவியை உடனே ராஜினாமா செய்துள்ளார்.
தன்னிலை விளக்கமாக அவர் தனது கருத்துக்களை, தனிப்பட்ட விமர்சனங்கள் இல்லாமல், யதார்த்தனமான உண்மை நிலவரத்தை ஆளுங் கட்சிபற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இதற்காக அவரது வீட்டுக்குள் நேற்று கல்லெறி தாக்குதல் நடைபெற்றது என்பது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஜனநாயக நாட்டில் கருத்துக் கூறக்கூட உரிமையில்லையா? ஆளுங் கட்சிக்குத்தான் அவப்பெயர் ஏற்படுத்துவதோடு, அவரது குற்றச்சாட்டுக்கு கருத்து ரீதியாக பதில் அளிக்காமல், இப்படிப்பட்ட வன்முறை, கலவரம், அச்சுறுத்தலில் ஈடுபடுவது எவ்வகையில் நியாயமாகும்?
விஷமிகளை - உண்மைக் குற்றவாளிகளை - உடனடியாக கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாட்டுக் காவல்துறை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.