அமைச்சர் வார்னிங் கொடுக்கும் அளவுக்கு 'காலா' பட பாடல்களில் அப்படி என்ன உள்ளது?
"அடங்கி வாழ்ந்தாக்க முடியாதம்மா, உரிமையை வாங்காம உயிர் போகுமா, எழுந்து வாடா, வாடா, எதிர்த்து நீ கேளுடா, பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா" போன்ற பாடல் வரிகள், உரிமையை மீட்போம் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள
Recommended Video
சென்னை: ஆட்சியாளர்களே எச்சரிக்கைவிடுக்கும் அளவுக்கு காலா திரைப்படத்தில் அப்படி என்னதான் பாடல் வரிகள் உள்ளன என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், இன்று படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று காலை வெளியிட்டார். ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் ஆகியோரின் ரசிகர்கள் பாடல்களை கேட்டு கொண்டாடி வருகின்றனர்.
பாடல்களில் தெறிக்கும் புரட்சி
புதிதாக வெளியிடப்பட்ட 8 பாடல்களில் நிக்கல் நிக்கல், செம வெய்ட்டு, உரிமையை மீட்போம், தெருவிளக்கு என பல பாடல்களிலும் முழுக்க முழுக்க முதலாளித்துவம், ஜாதி அடிமைத்தனத்திற்கு எதிரான வரிகள் தெறிக்கின்றன. காலா படத்தின் பாடல் என அறியாத ஒருவரிடம் நீங்கள் இந்த பாடல்களை போட்டு காண்பித்தால், கண்டிப்பாக அது ஏதோ கம்யூனிஸ்ட் கட்சியின் தெருவோர விழிப்புணர்வு பாடல்கள் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு பாடல்களில் கம்யூனிச சித்தாந்தங்கள் ஒவ்வொரு வரியிலும் தூவப்பட்டுள்ளன.
பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா
"சமத்துவம் பிறந்திட, விடுதலை கிடைத்திட தோழா கை இணைத்து போராடு, உணவு, ஆடை, வீடு போல கல்வி உனது அடிப்படை தேவை" போன்ற வரிகள், தெருவிளக்கு என தொடங்கும் பாடலில் இடம் பெற்றுள்ளன. "நிலமே எங்க உரிமை" "யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா, இங்கே வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா" , "அடங்கி வாழ்ந்தாக்க முடியாதம்மா, உரிமையை வாங்காம உயிர் போகுமா, எழுந்து வாடா, வாடா, எதிர்த்து நீ கேளுடா, பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா" போன்ற பாடல் வரிகள், உரிமையை மீட்போம் என்ற பாடலில் இடம் பெற்றுள்ளன.
கிளர்ச்சி அச்சம்
இதுபோன்ற உரிமை மீட்பு வரிகள்தான் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால், இதனால் கிளர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளதை அமைச்சர் ஜெயக்குமாரின் இன்றைய பேட்டி நிரூபிக்கிறது. "அரசியல் சுய நலத்திற்காக, சந்தர்ப்பவாதத்திற்காக, அமைதியாக உள்ள தமிழகத்தில் யாரும் குழப்பம் ஏற்படுத்த கூடாது, அப்படி குழப்பம் ஏற்படுத்த யாராவது முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார் ஜெயக்குமார்.
கபாலியில் துவக்கம்
கபாலி திரைப்படத்தில், இடம் பெற்ற, பாடல் ஒன்றில், ஆண்டைகளின் கதை முடிப்போம் என்ற வரிகள் இடம் பெற்றபோதும் இதுபோன்ற எதிர்ப்புகள் இடைநிலை மேல்ஜாதியினரிடமிருந்து எழுந்தன. ஆனால், இம்முறை, பெரும்பாலான பாடல்களை புரட்சிகர சிந்தனையுடன் கொண்டுவருவதில் மெனக்கெட்டுள்ளார் ரஞ்சித்.
கிரெடிட் யாருக்கு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆயத்தமாகியுள்ள சூழலில் வெளியாகியுள்ள காலா பாடல்கள், அவரது அரசியல் கொள்கைகளை பறைசாற்றுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ ஆதரவாளர் என்ற விமர்சனத்தை ரஜினிகாந்த் உடைத்துள்ளார் என்கிறார்கள் அவர்கள் ஆதரவாளர்கள். அவரின் அரசியலுக்கு காலா பாடல்கள் துணையாக இருக்கப்போவதாக பெருமிதம் தெரிவிக்கிறார்கள். ஆனால், இதில் ரஞ்சித் பங்குதான் அதிகம் என்றும், ரஜினிகாந்த்தை பொறுத்தளவில் அவர் வலதுசாரிதான் என்றும், திரைப்படத்திற்கு வாயசைப்பதோடு அவர் பணி முடிந்தது என்கிறார்கள் மறு தரப்பினர்.