தேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்
அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம் என்று ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதற்கு, வரவிருக்கும் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பணம் பதுக்க ஆரம்பித்துள்ளதே காரணம் என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஒரே சமயத்தில் திடீரென பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பல மாநிலங்களுக்கு வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலும் தான் காரணம்.
அரசியல் கட்சிகள் காரணம்
மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் செலவிற்காக பணத்தை பதுக்கினாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். மிகப்பெரிய அளவிலான தொகை பதுக்கப்பட்டதால் தான் அனைத்து மாநிலங்களிலும் சீராக இருந்து வந்த பணப்புழக்கம் திடீரென முடங்கி போயிருக்கிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கும், சிறு, குறு தொழில்களை செய்து வருபவர்களுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போதும், தற்போது பணத்தட்டுப்பாட்டின் போதும் பல மணிநேரம் ஏடிஎம் மையங்களில் வரிசைக்கட்டி காத்திருப்பது பொதுமக்கள் தான். வழக்கத்திற்கு மாறாக தேவை அதிகரித்துள்ளதால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. முன்பு இருந்ததை விட தற்போது அதிகப்படியானோர் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாறி வரும் நிலையில், தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் இருக்க வேண்டுமே தவிர, பணத்தட்டுப்பாடு ஏற்பட கூடாது.
தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு
தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு கருப்பு பணத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகள் தோல்வியுற்றதை வெளிக்காட்டுகிறது. ஊழலையும், லஞ்சத்தையும் தடுக்காமல் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. தேர்தலுக்காக அதிக அளவிலான பணத்தை அரசியல் கட்சிகள் பதுக்கியிருப்பதால் தான் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும். தேர்தலில் ஒரு தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையை விட 10, 100 மற்றும் 1000 மடங்குக்கு அதிகமான தொகையை செலவு செய்யும் அரசியல் கட்சிகளை பார்க்கிறோம்.
தேர்தல் ஆணையம்
தேர்தல் சமயத்தில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் தேர்தல் ஆணையம், அதன் பிறகு அரசியல் கட்சிகளை கண்டுகொள்வதில்லை. அரசியல் கட்சிகளால் பதுக்கப்படும் பெரும் அளவிலான தொகைதான் தேர்தல் சமயத்தில் வெளிவிடப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் அதிக பணம் செலவு செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய வழிமுறைகளை வரையறுக்க வேண்டும் என்று ஈஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.