தலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்!!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒன்றிணைந்து உதவி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி: ஆளுக்கொரு திசை, ஆளுக்கொரு போராட்டம், ஆளுக்கொரு அறிக்கை, ஆளுக்கொரு கொள்கை இப்படியேதான் தமிழக அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பொது பிரச்சனைகளுக்கு கூட தமிழக கட்சிகள் ஒன்று சேர்வது அபூர்வம்தான். அவ்வளவு ஏன்? கல்யாண வீடு, துக்க வீடுகளுக்கு கூட தனித்தனியாக தமிழக அரசியல்வாதிகள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
சட்டசபையை தவிர ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதும், பேசிக்கொள்வதும் நடப்பதே குறைவாக இருக்கிறது. ஊரே அழிந்தாலும் ஒன்றாக சேராதவர்கள் ஒரு விஷயத்தில் இணைந்திருக்கிறார்கள் என்றால் அது சந்தோஷம்தானே! அப்படி ஒரு சம்பவம்தான் இது.
50 குடிசைகள் எரிந்து நாசம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலுள்ள பகுதி பெரியநாயகிபுரம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் ஒருசில ஓட்டு வீடுகளை தவிர மற்ற வீடுகள் எல்லாமே கூரைவீடுகள்தான். இந்நிலையில், இங்கு கடந்த 17-ந் தேதி ஒரு வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் தீயானது வேக வேகமாக அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளிலிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களுக்கும் டமார் டமார் என வெடிக்க தொடங்கின. இதில் 50 குடிசை வீடுகள் எரிந்து நாசம் அடைந்தது.
அமைச்சர் நேரில் ஆய்வு
இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த நகை, பணம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள், வீட்டுப் பத்திரங்கள் மற்றும் வீட்டு பொருட்கள், எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன. சேத மதிப்பு மட்டுமே பல லட்சங்கள் ரூபாய் இருக்கும். இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் ஏராளமானோர் நேரில் பார்வையிட்டும் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறியும் சென்றனர்.
ஒன்றிணைந்த கட்சிகள்
ஆனாலும், தீயினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுலைந்த இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்பகுதியில் தோன்றியது. அதன்படி, இந்த பகுதியிலுள்ள அதிமுக, திமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், அமமுக என அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்தனர். தங்கள் மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்து இவர்கள் ஒரு குழுவையும் உருவாக்கி உள்ளனர். அந்த குழுவில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் தங்கள் சொந்த பணத்தை போட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
முதல்கட்டமாக ரூ.3 லட்சம் சேர்ந்தது. இதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து கொடுக்க முடிவெடுத்தனர். வெறும் பணம் மட்டும் இல்லாமல் எரிந்து போன வீட்டுமனை பத்திரங்கள், அரசாங்க சான்றிதழ்களான ஆதார், ரேஷன் கார்டுகள் மீண்டும் அம்மக்களுக்கு கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். குடிசை பகுதி ஆகையால் தீவிபத்துகள் அடிக்கடி நிகழும் என்பதாலும், அவசரம் ஆபத்திற்கு தீயணைப்பு வாகனம், அல்லது ஆம்புலன்ஸ் போன்றவை ஊருக்குள் சிரமமின்றி வருவதற்காக சாலையோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
சண்டை இனி லேதுரா
இப்படி தமிழக அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்களுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மற்ற பகுதிகளிலும் நிர்வாகிகளின் இந்த செயல் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த பகுதி மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் எல்லா அரசியல் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் தலைவர்களும், தொண்டர்களும் இணைந்து மக்களுக்காக செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்!!! அப்படி மட்டும் இணைந்துவிட்டால்.. ஜாலிதான் சகோதரா.. சண்டை இனி லேதுரா!!!