பேரா. ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக போராட்டம்- அரசியல் துறை வகுப்புகளையே ரத்து செய்தது சென்னை பல்கலை.!
சென்னை: சென்னை பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசியல் மற்றும் பொது நிர்வாக துறை வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை பல்கலைக் கழகத்தின் 6 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவரங்களை துறை தலைவர்களிடம் பல்கலைக் கழக நிர்வாகம் கோரியது. இதனை அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் ஏற்கவில்லை.
இதனால் அவரது துறைத் தலைவர் பதவியை பல்கலைக் கழக நிர்வாகம் பறித்தது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 10 பேரை சஸ்பென்ட் செய்து பல்கலைக் கழக நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மாணவர் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் மற்றும் பொது நிர்வாக துறை வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.