ஓட்டுக்கு பணம் தருவோர் வாக்காளர்களை நாய்களாகவும், வேலைக்காரர்களாகவும் பார்க்கின்றனர் - கங்கை அமரன்
ஓட்டுக்கு பணம் தரும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை நாய்களாகவும் வேலைக்காரர்களாகவும் பார்ப்பதாக பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓட்டுக்கு பணம் தரும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை நாய்களாகவும் வேலைக்காரர்களாகவும் பார்ப்பதாக பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் ஜென்மங்கள் திருந்தாது என்றும் கங்கை அமரன் கடுமையாக சாடினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 12-ந் தேதி இடைத்தேர்தல நடைபெறுகிறது. அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா, தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் 10 கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னை மாநகர காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 25 குழுக்களாக பிரிந்து பணிபுரிந்து வரும் துணை ராணுவத்தினர் வீதிவிதியாக கண்காணித்து வருகின்றனர்.
பீதியை கிளப்பும் வீடியோக்கள்
பணப்பட்டுவாடா செய்யும் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து புதிய அதிகாரிக நியமித்து வருகிறது. இருப்பினும் பணம் பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. பணம் பட்டுவாடா செய்யும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நாய்களாக பார்க்கின்றனர்
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் பிரச்சாரத்துக்கு நடுவே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது , ஓட்டுக்கு பணம் தரும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை நாய்களாக பார்க்கிறார்கள் என சாடினார்.
கேட்பார்கள் என நம்பிக்கை
ஓட்டுக்கு பணம் தருவோர் வாக்காளர்களை நாய்களாகவும், வேலைக்காரர்களாகவும் பார்க்கின்றனர். ஓட்டுக்கு பணம் வழங்கினால் வாக்காளர்கள் சொல்வதை கேட்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள.
பணம் கொடுக்கும் ஜென்மங்கள் திருந்தாது
வாக்குக்கு பணம் கொடுக்கும் ஜென்மங்கள் திருந்தாது என்றும் கங்கை அமரன் சாடினார். மேலும் தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தாமல் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.