இந்திய சுதந்திரம் வளம் பெறும்... ஆதார் தீர்ப்புக்கு கமல், ப.சிதம்பரம், சாமி வரவேற்பு!
தனி மனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை : தனி மனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டிருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சுப்ரமணியன் சாமி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆதாரை மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு கட்டாயமாக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு மக்களுக்கு சற்று ஆறுதலாக அமையும்.
மேலும் தனி நபர் ரகசியத்தை பாதுகாப்பது என்பது அடிப்படை உரிமை கிடையாது என்று 1954, 1962-களில் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
|
இந்தியாவை உருவாக்கும் விஷயம்
மத்திய, மாநில அரசு தொடர்பான செய்திகளுக்கு உடனுக்குடன் டுவீட்டில் பதில் போட்டு வரும் நடிகர் கமல்ஹாசனும் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கமல்சன் கூறியுள்ளதாவது : தனி மனித சுதந்திரத்தில் எந்த தெளிவற்ற நிலை இருக்கக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளது. மக்கள் நிச்சயம் மாண்புமிகு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இது தான் இந்தியாவை உருவாக்குவதற்கான விஷயங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
சுதந்திரம் வளம் பெறும்
இதே போன்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனி மனித சுதந்திரத்திற்கான மையக்கருவே தனியுரிமை தான். 21வது சட்டப்பிரிவு புதிய சிறப்பை பெற்றுள்ளது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. 1947ம் ஆண்டு பெற்ற இந்திய சுதந்திரம் வளம் மற்றும் விஸ்திகரிக்கப்பட்டுள்ளது.
|
வரவேற்பு
பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமியும் தனி மனித சுதந்திரத்தை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். சட்டம் 21ன் படி தனிமனித உரிமை என்பது அடிப்படையான விஷயம் என்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சவால்
தற்போதைய நிலையில் ஆதாரில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஆதார் அடையாள அட்டை தற்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.