மாஜி அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செந்தமிழனின் மா. செ. பதவி பறிப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர்களான பொள்ளாச்சி ஜெயராமன், செந்தமிழன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவர்களது மாவட்டச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி. செந்தமிழன் எம்.எல்.ஏ., திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் எம்.எம்.பாபு (சென்னை மாநகராட்சி 142-வது வார்டு கவுன்சிலர்), திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் (தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தேர்தல் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் (துணை சபாநாயகர்), அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் ப.மோகன் (ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கடன் உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.பாபு ஆகியோர் தனித்தனியே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
முன்னாள் அமைச்சர்கள்
பொள்ளாச்சி ஜெயராமனும், செந்தமிழனும் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். அதிலும் பொள்ளாச்சி ஜெயராமன் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் நீண்ட காலம் இருந்தவர். இப்போது கட்சிப் பதவியையும் அவர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதல் புகாரில் சிக்கியவர் செந்தமிழன்
செந்தமிழன் மீது அவரது மனைவி லட்சுமி ஏற்கனவே பல்வேறு பரபரப்புப் புகார்களை சுமத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். கடந்த ஆண்டு அவர், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் ஒரு சேடிஸ்ட் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.