வருவாய்க்கு வழியில்லை என்றதும் அரசியலுக்கு வருகிறார்.. கமலை விளாசும் பொள்ளாச்சி ஜெயராமன்!
சினிமாத் துறையில் வருவாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலை வந்த பிறகே நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
கோவை : சினிமாத்துறையில் வரி போட்டால் வருவாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்று வரும் போதே நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கமல்ஹாசன் சினிமாத் துறையில் தனக்கு பாதிப்பு வரும் போதே அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறார். ஒவ்வொரு படத்திற்கு ரூ. 50 கோடி ,ரூ. 75 கோடி என்று பணம் வாங்கிக் கொண்டு தானே இவர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் வாங்கும் சம்பளத்தில் சிறு தொகையை வரியாக செலுத்தலாமே.
அந்த வரியை வைத்து அரசாங்கம் மக்களுக்கு தரமான சாலை, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க முடியும். மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டியை அறிமுகம் செய்துள்ளது, மாநில அரசும் கேளிக்கை வரி விதிக்க முடிவு செய்துள்ளது, இந்நிலையில் தனது வருமானத்திற்கு ஆபத்து என்றவுடன் அரசியலுக்கு வருகிறார் கமல்.
நிர்ணயித்த கட்டணத்தில் திரையரங்குகளில் டிக்கெட் விற்க நடிகர் கமல்ஹாசன் அறிக்கைவிட வேண்டும். அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை தவிர்க்க கமல்ஹாசன் இதனை செய்ய வேண்டும், என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.