ஸ்டாலின் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சரமாரி தாக்கு!
சென்னை: சென்னையில் இன்று துணை சபாநாயகர் ஜெயராமன் பேட்டியளித்தார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக ஆவேசம் வெளிப்படுத்தினார்.
தனது பேட்டியில், அதிமுக உள் விவகாரங்கள் குறித்தும், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நிலைப்பாடு குறித்தும் அவர் தெரிவித்தார்.
தாயிடம் கோபம் கொண்டு திரும்பி வரும் குழந்தை போல பிரிந்து சென்றவர்கள் வருவார்கள் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்து அவர் தெரிவித்தார்.
திமுகதான் மைனாரிட்டி அரசு நடத்தியது
பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: ஸ்டாலினுக்கு மூளை வெப்பசலனம் ஏற்பட்டுவிட்டது. எடப்பாடியை பார்த்து கோபமாக, வேகமாக கேள்வி கேட்டிருக்கிறார் ஸ்டாலின். 96 எம்.எல்.ஏக்களைக் கொண்டு மைனாரிட்டி ஆட்சி செய்தது திமுக வரலாறு. அப்படிப்பட்ட மைனாரிட்டி திமுக ஆட்சியில் பல அசம்பாவிதங்கள் நடந்தன.
தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு, பனையூர் இரட்டை கொலை என நடந்தன.
போராட்டங்கள் பின்னணியில் ஸ்டாலின்
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழகத்தில் அமைதியாக நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், செயற்கையாக போராட்டங்களை தூண்டிவிடுகிறார் ஸ்டாலின். போராட்டங்கள் மூலம் ஆட்சியை கலைக்க நினைக்கிறார். இன்ஸ்டன்ட்டாக முதல்வராக விரும்புகிறார் ஸ்டாலின். ஆனால், ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கனவாகவே போய்விடும்.
ஏற்கனவே நிரூபணம்
திமுகவின் தலைவராக முடியாதவர்தான் ஸ்டாலின். அவரின் விமர்சனங்களை வன்மையாக கண்டிக்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார்.
134 எம்எல்ஏக்கள் ஆதரவு
முதல்வர் எடப்பாடிக்கு 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. மைனாரிட்டி அரசு நடத்திய திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின், அதிமுக விவகாரத்தில் மூக்கை நுழைக்க கூடாது. இவ்வாறு தெரிவித்தார் பொள்ளாச்சி ஜெயராமன்.