ஜல்லிக்கட்டு போராட்ட களம்போல மாறிய பொள்ளாச்சி.. விரட்டியடித்த போலீஸ்.. அசையாத மாணவ, மாணவிகள்
Recommended Video
கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்திய கல்லூரி, மாணவ மாணவிகள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை உலுக்கிய பயங்கர பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புள்ள திருநாவுக்கரசு உட்பட 4 பேரை மட்டும் காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது.
ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே, இன்று சுமார் ஆயிரம், கல்லூரி, மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இன்று காலை முதல் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், டிஎஸ்பி ஜெயகுமார் நேரடியாக வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் காவல்துறையின் சமாதானப் பேச்சுவார்த்தையில், மாணவ-மாணவிகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் திடீரென அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தண்ணீரை பீச்சி அடிக்க கூடிய வஜ்ரா வாகனங்கள் , கலவரத்தை கலைக்கக்கூடிய வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இதையடுத்து மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு மனித சங்கிலி போல அமைத்துக் கொண்டு, கலைய மாட்டோம், கலைய மாட்டோம் என கோஷமிட்டனர். ஆனால் , காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மாணவ, மாணவிகளை பிடித்து இழுத்துத் தள்ளி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டினோம்.. போலீஸ் விசாரிக்கவில்லை.. பொள்ளாச்சி கேங் பரபர வாக்குமூலம்!
இதற்கு மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் உடனடியாக மூடுவதற்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர் . பாலியல் பலாத்காரத்தின் பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காக தான் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால், மாணவ மாணவிகளை மிக மோசமாக காவல்துறை கையாண்டு விரட்டியடித்து உள்ள சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு கால கட்டத்தில், நடத்தப்பட்ட போராட்டங்களை நினைவுபடுத்துவதை போல இருந்தது இந்த சம்பவம்.
நாளை இன்னும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர், மாணவ, மாணவிகள்.