பொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளி - ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமியைத் தேடும் பணியில் போலீஸ்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற இரண்டு மாணவிகளின் பாலியல் வன்முறையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குற்றவாளி வீராசாமி ஏற்கனவே ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த விவரம் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி டி.இ.எல்.சி ஆதரவற்றோர் மாணவ- மாணவிகள் விடுதியில் இருந்து கடத்தப்பட்ட 10 மற்றும் 11 வயதான 2 மாணவிகள் கடந்த 11 ஆம் தேதி அன்று இரவு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீராசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விடுதி மாணவிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்த போது அடுக்கடுக்காக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த குற்றங்கள் மட்டும் அல்லாமல் பஸ் நிலையப் பகுதியில் பிச்சை எடுக்கும் தொழில் செய்யும் சிறு பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதையே இவர் பொழுதுபோக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் முன்பு ஒரு பெண் தனது 8 வயது மகளுடன் படுத்திருந்திருக்கின்றார்.
அப்போது அங்கு வந்த வீராசாமி அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த சிறுமியின் தாயார் சத்தம் போட்டு ஊரைக் கூட்டி உள்ளார்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து வீராசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.இந்த சம்பவத்தின் போது வீராசாமியின் சட்டைப்பையில் இருந்த ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அது பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் ஒரு பயணியிடம் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்ததோடு விட்டு விட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் வீராசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியும், அவளது தாயாரும் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த நிலையில் விடுதி மாணவிகள் பலாத்கார வழக்கில் வலுகூட்டுவதற்காக வீராசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை போலீசார் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
சிறுமியும், அவளது தாயும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மூலம் வீராசாமியை அடையாளம் காட்டுவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.